திங்கள், 18 ஆகஸ்ட், 2014

பிரார்த்தனை எவ்வாறு செய்ய வேண்டும்?

பிரார்த்தனை என்பது என்ன? உலக வழக்கில் பிரார்த்தனை என்பது நம் ஆசை நிறைவேறுவதர்காக நம் இஷ்ட தெய்வத்திடம் வேண்டுவதானது. இவ் வேண்டுதல் சில சமயங்களில் நிறைவேறுகிறது, மற்றும் பல சமயங்களில் நடப்பதில்லை. நம் மனம் அச்சமயங்களில் வருத்தமுருகிறது. நம்மிடம் எதோ குறை உள்ளது; அதனால்தான் தெய்வம் நம் வேண்டுகோளிற்குச் செவி சாய்க்க மறுக்கிறது என்று நினைக்கிறோம். இது உண்மையான புலப்பாடல்ல.

ஒரு சிறுவன் கடையொன்றில் பளபளப்பான சரிகையில் சுற்றப்பட்டிருக்கும் மிட்டாயை கண்டு அதை வாங்கித் தின்ன ஆசைப்படுகிறான். அவன் தந்தையிடம் சென்று அதை வாங்கித்தரச் சொல்கிறான். தந்தை அதற்கு மறுக்கிறார். ஏன் என்றால் அந்த மிட்டாய் அவன் உடலுக்குக் கெடுதல் என்று அவருக்குத் தெரியும். அதேப்போலவே கடவுள் நம்முடைய பிரார்த்தனையை ஏற்க மறுப்பது அந்த ஆசை நமக்கு ஊரு விளைவிக்கக் கூடியது என்ற காரணத்தால். ஒரு விதத்தில் பார்த்தால் நாமும் மனதளவில் சிறுவர்களே. நமக்கு எது நல்லது எது கேட்டது என்ற அறிவு போதாது.

நாம் பிரார்த்தனை செய்யாமலேயே பல நல்ல விஷயங்களைக் கடவுள் நமக்கு அருளியுள்ளார். நாம் கேட்காமலேயே நம் தாயும் தந்தையும் தேவையானவற்றைக் குழந்தைப் பருவத்தில் நமக்கு வாங்கித் தரவில்லையா? கடவுளுக்கு நமக்குத் தேவையானவதைப் பற்றித் தெரியும். அவர் கண்டிப்பாக அவற்றை அந்தந்தச் சமயங்களில் கொடுப்பார். நமக்கு இனிப்பு சுவை மிகவும் பிடிக்கும்.ஆனால் இனிப்பையே எப்போதும் உண்டிருந்தால் அது நமக்கு திகட்டிவிடும் அல்லவா? அதேப்போல்தான் இன்பம் மட்டும் நிறைந்திருக்கும் வாழ்க்கை அலுத்துவிடும். துன்பம் மனதை வாட்டினாலும் தைரியத்தையும் திண்மையையும் கொடுக்கும். உடல் பிணியைப் போக்க கசப்பான மருந்து தேவைப்படுவதைப்போல் அவதியும் கஷ்டமும் வாழ்வின் மாயத் தன்மையை அறிந்து கொள்வதற்கு உதவும்.

நாம் மனதை இன்பமாக வைத்துக்கொள்ள இறைவனிடம் ஆசைகளுக்காகப்
பிரார்த்தனை செய்வதை விட்டு, அனைவரின் நலுனுக்காக வேண்ட               வேண்டும்.  "நாங்கள் உம் குழந்தைகள். எங்கள் அனைவரின் நலனையும் காப்பீர்!" என்று நாம் பிரார்த்தித்தால் அந்த மஹாசக்தி கண்டிப்பாகச் செவி சாய்ப்பார். அதில் சந்தேஹமே வேண்டாம்.