மனமடங்கில் ........
நம் அன்றாட வாழ்வில் பற்பல இன்பத் துன்பங்களைச் சந்திக்கிறோம்.
அவற்றின் விளைவாக வரும்காலங்களில் மேலும் பல நிகழ்வுகளையும் தொடர்ந்து
அனுபவிக்கிறோம். ஆனால் இவை அனைத்துமே நமக்கு நிலைத்து நிற்கும் இன்பத்தையோ
சாந்தியையோ தருவதில்லை.
நீங்கள் கடற்கரைக்குச் சென்றிருக்கிறீர்களா? அங்குக் கடல் அலைகள் ஒன்றின்பின் ஒன்றாக ஆரவாரித்துக் கரைக்கு வந்து கொண்டிருக்கும். ஒரு வினாடி நேரம் கூட ஓயாமல் அலைகள் புரண்டு வந்து கொண்டிருக்கும். நம் மனமும் அல்லும்பகலும் ஓய்வொழிவில்லாமல் எண்ண அலைகளை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது.
எண்ணங்களால் நாம் ஏன் துன்பப்பட வேண்டும்? அவை வருவதுடன்
நிற்பதில்லை. அவை நம்மைச் செயல் செய்யத் தூண்டுகின்றன. அச்செயல்களில் சில நன்மை
பயக்கும்; மற்றும் சில தீமை பயக்கும். எவை நல்லவை, எவை தீயவை என்று அறிய நாம் நம்
புத்தியை உபயோகிக்கிறோம். எண்ணங்கள் தோன்றியதும் சிந்திக்காமல் செயல்படத் துவங்கினால் சமயத்தில் அவை நம்மைப் பெரும் இடர்பாட்டில் சேர்த்து விடும். எந்தச் செயல்
செய்யமுற்படும் முன்னும் அச்செயலின் விளைவுகளை நினைத்துப் பார்க்க வேண்டும். நாம்
அனைவரும் காட்டில் வாழும் மிருகங்கள் அல்ல. ஓர் ஊரில் மற்ற மக்களுடன் சிலபல
சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழும் நாகரிக மனிதர்கள். நம் செயல் நமக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பது முக்கியமே. ஆனால் அது மற்றவர்க்குத் தீங்கிழைக்குமேயானால்
அதை நாம் தவிர்க்க வேண்டும். நம் செயல் சமூகத்தில் சலசலப்பை ஏற்படுத்தக்கூடாது.
இதனால்தான் நம் எண்ணங்களைக் கட்டுப்படுத்தி செம்மைவழியில் சிந்திக்கக் கற்றுக்
கொள்ள வேண்டும். எது நல்லது, எது கேட்டது என்று எப்படி அறிவது? நல்லது, கேட்டது
அறிய நம் மனசாட்சியே உற்றக் கருவி எனலாம்.
மனம் எண்ணங்களை உற்பத்தி செய்யும் சாதனம் என்றால் அதன் தாக்கங்களை அறிய புத்தியை பயன்படுத்துகிறோம். அதன் தன்மையை அறிய மனசாட்சியே சிறந்த துணை. நாம் என்ன நினைத்தாலும் மற்றும் எந்தச் செயல் செய்யும்முன்னும் நம்முள் ஓரு குரல் இது சரி; இது தவறு என்று கூறும். இந்தக் குரலே மனசாட்சி. நாம் ஒருவர்க்குக் கெடுதல் நினைக்கும்போது மனசாட்சி அது தவறு, என்றுரைக்கும். நாம் அதை அலட்சியம் செய்து தீயச்செயல் செய்தால் அதற்கான தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
பலர் மனதை எங்களால் அடக்க முடியவில்லை அது தறிக்கெட்டு ஓடுகிறது
என்று சொல்ல கேட்டிருக்கிறோம். ஒரு குதிரையைப் பழக்குவதைப் பார்திருக்கிறீர்களா?
முதலில் அது யாரையும் அதன் மேலேற அனுமதிக்காது. அருகில் சென்றால் எட்டி
உதைக்கும். அதைப் பழக்குபவர், அதன் தேவைகளை முதலில் தானே கவனிப்பார். குதிரைக்குப்
புல் மற்றும் கொள் கொடுப்பது; அதைக் குளிப்பாட்டுவது. தினமும் அதன் இருப்பிடத்தைச்
சுத்தம் செய்வது அதன் தேவைகளைக் கவனித்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் குதிரையை
தன்வசப்படுத்துவார். பிறகுதான் அதன்
மேலேறி அதை ஓட்டப் பழகுவார். மனமும் ஒரு குதிரையைப் போன்றதே. அதை அடக்கப் பயிர்ச்சித்
தேவை.
நம் மனதை பல மனிதர்களின் சொல்லும், செயலும், நிகழ்வுகளும் பாதிக்கின்றன. நம் மிக
நெருங்கிய உறவுக்காரர்கள் மற்றும் நண்பர்கள் கூறுவது நம் மனதில் பெருமளவில்
தாக்கங்களை உண்டாக்குகின்றன. வெளியுலகில் நடைபெறும் சோகநிகழ்வுகள் மற்றும் அசாதாரணச்
சம்பவங்களும் நம் மனதை உலுக்குகின்றன. நம் எண்ணங்கள் இவற்றால்
உருவாக்கப்படுகின்றன. அலைபாயும் கடலைவிட அது மோசமாகக் கொந்தளிக்க ஆரம்பிக்கிறது. மனதை
பாதிக்கும் நிகழ்வுகளுக்குத் தீர்வு காண நாம் விழைகிறோம். நமக்குத் தொடர்புள்ள
நிகழ்வுகளுக்கு நம்மால் ஏதாவது செய்ய முடியும். வெளியுலக நிகழ்வுகளை நம்மால்
கட்டுப்படுத்த முடியாது. மனதை எவ்வாறு சாந்தநிலைக்குக் கொண்டு வருவது என்பதே நம்
பிரச்சனை. மனம் எப்போது அமைதியை அடையும்? ஆசைகள் குறைந்தால்தான் மனம்
அமைதியாகத் தொடங்கும். ஆசைகளை எவ்வாறு குறைப்பது? தேவைகளை குறைத்தால்தான் ஆசைகளைக்
கட்டுப்படுத்த முடியும். உதாரணமாகத் தீபாவளியின்போது ஒவ்வொரு வருடமும்
புத்தாடைகளை வாங்குகிறோம். விலைமிகுந்த படோடமான ஆடைகளாகப் பார்த்து வாங்குகிறோம்.
முன்பு
வாங்கிய துணிகளையே திருப்பித் திருப்பி வாங்குகிறோம். பல ஆடைகளை அணியாமல் வைத்துள்ளோம். ஒரு தீபாவளிக்கு நாம் சாதாரண உடைகளை வாங்கிக் கொண்டு அதில்
மிச்சமான பணத்தை ஏழைகளுக்குச் செலவிடலாமே?
உண்ணும் உணவு, வாழ்க்கை நடைமுறை, அனைத்திலும் எளிமை மற்றும் படடோபத்தைக்
குறைத்தால் கண்டிப்பாக ஆசைகள் குறையும்.
வாழ்வின் குறிக்கோள் செல்வந்தனாக ஆவது
என்பதற்குப் பதிலாக மனதை அடக்குவது என்று கொண்டால் கொஞ்சம் கொஞ்சமாக மனம் அடங்கும்.
மனமடங்கில் என்ன ஆகும்? மனமடங்கில் மதித் தோன்றிடும். மதி என்றால்
என்ன? மதி என்பது புத்தி. புத்திதான் எப்போதும் இருக்கிறதே
அதற்கு மனம் ஏன் அடங்க வேண்டும்? புத்தி என்பது பகுத்தறியும் தன்மை என்று நம்
நூல்கள் சொல்கின்றன. நம் புத்தி ஆசைகள் நிறைந்த மனதில், சரிவரச் செயல்படுவதில்லை. ஆசைகள்
அடங்கிய நிச்சலனமான மனதில்தான் புத்தி உண்மையாக வேலை செய்யத் தொடங்கும். அந்தப்
புத்திக்குதான் மதி என்று பெயர்.
அந்த மதி தோன்றியதும் அதன் மூலம் நாம் நம் பிறவிப்பயனை அடையும் மார்க்கம் தெரியவரும். நம் பிறவியின் முக்கிய நோக்கமே பிறவிப்பயனை அடைவதுதான். பிறவிப்பயன் என்பது என்ன? ‘நாம் யார்?’ என்றறிவதே அது. நாம் இந்த உடல் அல்ல; மனம் அல்ல; பஞ்சக் கரணங்கள் அல்ல; மற்றும் புத்தி அல்ல. அனைத்துக்கும் அப்பால் உள்ள ஆத்மனேயாகும் எனும் அறிவு உண்டாக வேண்டும். அதுவே பிறவிப்பயன். இந்த அறிவு படிப்பதால் ஏற்படாது. புத்திப்பூர்வமாக உணர்வதால் ஏற்படாது. அது அனுபவரீதீயாக உண்டாக வேண்டும். அதற்குச் சாதனைத் தேவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக